"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Siddhasana – சித்தாசனம்

சித்தி என்றால் வெற்றி. சித்தம் என்றால் மனம். இந்த (Siddhasana – சித்தாசனம்) பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதால் பிரம்மச்சரியத்தில் எளிதாக மனம் நிலைபெற்று யோகம் விரைவாக கைகூடி வெற்றி பெறுவதால் இது “சித்தாசனம்” என பெயர் பெற்றது.

மிக பழமையான ஆசனங்களில் சித்தாசனமும் ஒன்றாகும்.

Siddhasana

10 ம் நூற்றாண்டின் தொடக்ககால நூலான “கோரக்ஷ சதகத்தில்” இது ஒரு பத்மாசனத்திற்கு இணையான தியானத்திற்கான சிறப்பான இருக்கையாகக் கூறப்பட்டுள்ளது.

15 ம் நூறாண்டில் இயற்றப்பட்ட “ஹடயோக பிரதீபிகா” வும் இந்த சித்தாசனத்தின் சிறப்புகளை விவரிக்கிறது. சித்தாசனத்தில் தேர்ச்சி பெற்றபின் வேறு எந்த ஆசனமும் தேவையில்லை என்று கூறுகிறது.

ஏனென்றால், இது பிரம்மச்சரியத்திற்கு உங்களை அழைத்து செல்வதில் முதன்மையானதாக செயல்பட்டு முக்தியின் கதவை திறந்து மோட்சத்தில் உங்களை அமரவைப்பதாகவும் அது கூறுகிறது.

17 ம் நூற்றாண்டின் “கெரண்ட சம்ஹிதை” (Gheranda Samhita) என்னும் யோக நூலும் ஆசாபாசங்களில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மாவின் விடுதலைக்கு இந்த சித்தாசனம் பேருதவி புரிவதாக கூறுகிறது.

பெயர் – Siddhasana

தமிழில் – சித்தாசனம்.

சமஸ்கிருதம் – Siddhasana.

ஆங்கிலம் – Accomplished Pose, Perfect Pose.

வேறுபெயர்கள் – சமாசனம்

ஆசனத்தின் நிலை – Seated.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Meditative.

சரி, இந்த சித்தாசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்க்கலாம் வாருங்கள்…

Siddhasana – சித்தாசனம் – பயிற்சிமுறை

முதலில் ஒரு கெட்டியான விரிப்பில் கால்களை நீட்டி உட்காரவும்.

பின் இடதுகாலை மடித்து குதிகால் குதத்தின் (ஆசனவாய்) பக்கத்தில் இருக்கும்படி நெருக்கி வைக்கவும்.

பின் வலதுகாலை மடித்து இடதுகாலின் மீது வைத்து வலது குதிகால் இனப்பெருக்க உறுப்பை அழுத்தி இருக்கும்படி நெருக்கி வைத்துக்கொள்ளவும்.

அதாவது, இடது குதிகால் மீது வலது குதிகால் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.

தொடை, முழங்கால் ஆகியவை தரையில் படிந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

Accomplished Pose - Siddhasana

கைகள் இரண்டையும் முழங்கால்மீது சின்முத்திரை பிடித்தபடி வைக்கவும். அல்லது இரண்டு உள்ளங்கைகளும் மேல்நோக்கி இருக்கும்படி இடது உள்ளங்கைமீது வலதுகையை அல்லது வலது உள்ளங்கை மீது இடது உள்ளங்கையை வைத்து “பைரவி முத்திரை” பிடித்து மடிமீது வைத்துக்கொள்ளலாம்.

இடுப்பு, முதுகு, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும்.

மூச்சை நன்கு இழுத்து மெதுவாக ஒரே சீராக சுவாசிக்கவும்.

2 முதல் 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம்.

தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம்.

பயிற்சின் பலன்கள்

பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெறுகிறது. மூட்டு வலிகள் நீங்குகிறது.

நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பை நேராக்க உதவுகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் கால்வலி, முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. இதனால் முகம் பொலிவு பெறுகிறது.

தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. இந்த பயிற்சியால் அலைபாயும் மனம் அமைதி அடைகிறது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

சமாசனம்

இந்த சித்தாசனத்தை “சமாசனம்” என்றும் குறிப்பிடுகிறார்கள். சமஸ்கிருதத்தில் “சமா” என்றால் “சமம்” அல்லது “சமநிலை” என்று பொருள்.

சமாசனத்தை தமிழில் சொல்லவேண்டுமென்றால் “சம ஆசனம்” என்று சொல்லலாம்.

இந்த பயிற்சியில் இரண்டு குதிகால்களும் குதம் (ஆசனவாய்) இனப்பெருக்க உறுப்பு, தொப்புள் என்ற நேர்கோட்டில் அமைந்து உடலை இரு சமபாகமாக பிரிக்கிறதல்லவா அதனால் இதற்கு “சமாசனம்” (சம ஆசனம்) என்று ஒரு பெயரும் வழங்கப்படுகிறது.

யோக சாஸ்திரத்தில் சமாசனத்தை பற்றிய குறிப்பு மிக குறைவாகவே காணப்படுகின்றன. எனவே இந்த “சமாசனம்” எந்த ஆசனத்தின் மறுபெயர் என்ற குழப்பம் நெடுங்காலமாகவே நீடித்து வருகிறது.

சிலர் ஸ்வஸ்திகாசனத்தின் இன்னொரு பெயர்தான் சமாசனம் என வாதிடுவதும் உண்டு. ஆனால் ஸ்வஸ்திகாசனத்தைவிட இந்த சித்தாசனமே ஆசனவாய், இனப்பெருக்க உறுப்பு, தொப்புள் என்ற நேர்கோட்டில் சமமாக உடலை பிரிப்பதால் சித்தானத்தின் மற்றொரு பெயரே சமாசனம் எனவும் குறிப்பிடுவதுண்டு.

எது எப்படியோ சமாதானத்தை கடைப்பிடித்து சித்தம் கலங்காமல் சித்த சுத்தியோடு இந்த சித்தாசனத்தை பயிற்சி செய்து நலம் பெறுவோம்.

குறிப்பு

முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

விதைவாதம், விதைவீக்கம், விரைப்பை நீர்க்கோவை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!