"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Tadasana – தாடாசனம்

Tadasana – தாடாசனம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. வெறும் புத்தி சொல்வதோடு நிறுத்தி விடாமல் நோய் அணுகாமல் உடலை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் வகுத்துத் தந்துள்ளார்கள் நம் பெரியோர்கள்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீடித்து இவ்வுலகில் உயிர் வாழ முடியும் என்பதனை “திருமூலர்” தன்னுடைய திருமந்திரம் என்னும் நூலில்…

” உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும்  மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்று உடலின் மேன்மையை அழகாக சொல்லிச் சென்றுள்ளார்.

Tadasana - Mountain pose

உடல் வளமாக இருக்க பலவழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்தாலும் அதில் ”யோகா” என்னும் உடலையும், மனதையும் ஒரே நேரத்தில் வளப்படுத்தும் பயிற்சியே மிக முக்கியமானது எனலாம்.

வாழ்வுக்கு வளம் சேர்க்கும் நம்முடைய பதிவின் வாயிலாக ஆரோக்கியம் தரும் பல யோக ஆசனக்களைப்பற்றி கற்று வருகின்றோம். அந்த வகையில் இன்றைய யோகாசனப் பகுதியில் நோயற்ற வாழ்வுதனைத் தரக்கூடிய உன்னதப் பயிற்சியான அதே நேரத்தில் அனைவராலும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியதுமான ”தடாசனம்” என்னும் பயிற்சியைப்பற்றிதான் (Tadasana – Mountain pose) பார்க்க இருக்கின்றோம்.. வாருங்கள் பார்க்கலாம்.

Tadasana – தாடாசனம்.

“தடா” என்றால் “மலைக்குன்று“. மலைக்குன்றுபோல் உயர்ந்து நிற்பதால் இதற்கு Tadasana – தாடாசனம் என்று பெயர். இந்த தடாசனத்திற்கு “சமஸ்திதி ஆசனம்” (Samasthiti Pose) என்று ஒரு பெயரும் உள்ளது. சமஸ்திதி என்றால் “சம நிலைப்பாடு” என்று பொருள். இது மன அமைதி, விழிப்புணர்வு, சமநிலை ஆகியவைகளை பேணிக்காப்பதால் “சமஸ்திதி ஆசனம்” என்று அழைக்கப்படுகிறது.

இந்த தடாசனத்தைப் போலவே மற்றொரு ஆசனமும் இருக்கின்றது. அதன் பெயர் “தாளாசனம்” (Talasana – Urdhva Hastasana). இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும் இரண்டிற்குமுள்ள வித்தியாசம் யாதெனில், தடாசனத்தில் இரண்டு பாதங்களும்… குதிகால்கள் உட்பட… தரையில் நன்றாக படிந்து உறுதியாக இருக்கும்.

ஆனால், தாளாசனத்தில் இரண்டு பாதங்களின் குதிகால்களும் தரையிலிருந்து உயர்ந்து இருக்கும். இதுவே இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

தாளாசனத்தையும் (Talasana – Urdhva Hastasana) அதன் தன்மை மற்றும் பலன்களை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) ஐ உங்கள் விரல்களால் தட்டுங்கள்… அடுத்த நொடியே உங்களை ஜிவ்வென்று தாளாசனத்திற்கு கொண்டுசெல்வதை நீங்கள் நேரடியாகவே பார்க்கலாம்….

சரி,… இந்த பதிவில் நாம் மலைபோன்று உடலுக்கு உறுதியை தருகின்ற தடாசனத்தைப்பற்றி மட்டுமே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

பெயர் – Tadasana.

தமிழில் – தடாசனம்.

சமஸ்கிருதம் – Tadasana.

ஆங்கிலம் – Mountain pose. (மலைபோன்று நிற்கும் ஆசனம்).

வேறுபெயர்கள்

  • Samasthiti
  • Eqal Standing Pose.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – balance, Strength.

இது எளிதான அதே வேளையில் மிகச் சிறப்பான ஆசனம் எனலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். கணுக்கால், கெண்டைக்கால், இடுப்பு, கைகள், தோள்பட்டை முதலியவைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி.

சரி, இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.

தடாசனம் நின்றுகொண்டு பயிற்சி செய்யவேண்டிய ஆசனம் ஆகும்.

இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்கவும். பாதம் மற்றும் குதிகால்களை தரையில் நன்றாக பதிக்கவும்.

அதன்பின் இருகைகளையும் பக்கவாட்டில் மெதுவாக தலைக்குமேலே நேராக உயர்த்தவும். பின் இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக பிணைத்து இரு கைகளின் உள்ளங்கைகளை மேலே பார்த்தபடி வைக்கவும்.

Tadasana - Mountain pose step

பின் முதுகை நேராக்கி இடுப்பிலிருந்து உச்சந்தலை வரையுள்ள பகுதிகளை மேல்நோக்கி இழுக்கும்படியாக நிமிரவும்.

அதேவேளையில், உங்கள் தொடை மற்றும் முழங்கால் தசைகளை இறுக்கி வயிற்று தசைகளை உள்ளிழுங்கள். இதே நிலையில் 6 முதல் 10 வினாடி நேரம் நின்று அதன்பின் கைகளை பக்கவாட்டில் மெதுவாக இறக்கி உடலோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும். இந்த பயிற்சியில் ஈடுபடும்போது மூச்சை இயல்பாக விடவும்.

இதே ஆசனத்தை திரும்ப திரும்ப 5 முதல் 7 தடவை செய்து வரலாம்.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடலின் அத்தனை தசைகள் மற்றும் நரம்புகள் இயக்கப்பட்டு உடல் வளர்ச்சி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

முதுகுவலி, கழுத்துவலி, கால்வலி, குதிகால் வலி நீங்குவதோடு நுரையீரலும் பலம் பெறும். கணுக்கால், கெண்டைக்கால், தொடைகள், இடுப்பு, கைகள், தோள்பட்டை வலிமை பெறும்.

உடலின் அத்தனை தசைகளுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமைவதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மனதிற்கு அமைதியை தருகிறது.

முக்கிய குறிப்புகள்

தலைவலி உள்ளவர்கள் இந்த தடாசன பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களும் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் கால்களை சேர்த்து வைத்து பயிற்சி செய்வதற்கு பதிலாக சிறிது அகட்டிவைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். இது உடல் தடுமாற்றம் அடைவதை தவிர்க்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!