"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Tadasana – தாடாசனம்

Tadasana – தாடாசனம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. வெறும் புத்தி சொல்வதோடு நிறுத்தி விடாமல் நோய் அணுகாமல் உடலை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் வகுத்துத் தந்துள்ளார்கள் நம் பெரியோர்கள்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீடித்து இவ்வுலகில் உயிர் வாழ முடியும் என்பதனை “திருமூலர்” தன்னுடைய திருமந்திரம் என்னும் நூலில்…

” உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும்  மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”

என்று உடலின் மேன்மையை அழகாக சொல்லிச் சென்றுள்ளார்.

உடல் வளமாக இருக்க பலவழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்தாலும் அதில் ”யோகா” என்னும் உடலையும், மனதையும் ஒரே நேரத்தில் வளப்படுத்தும் பயிற்சியே மிக முக்கியமானது எனலாம்.

வாழ்வுக்கு வளம் சேர்க்கும் நம்முடைய பதிவின் வாயிலாக ஆரோக்கியம் தரும் பல யோக ஆசனக்களைப்பற்றி கற்று வருகின்றோம். அந்த வகையில் இன்றைய யோகாசனப் பகுதியில் நோயற்ற வாழ்வுதனைத் தரக்கூடிய உன்னதப் பயிற்சியான அதே நேரத்தில் அனைவராலும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியதுமான ”தடாசனம்” என்னும் பயிற்சியைப்பற்றிதான் (Tadasana – Mountain pose) பார்க்க இருக்கின்றோம்.. வாருங்கள் பார்க்கலாம்.

“தடா” என்றால் “மலைக்குன்று“. மலைக்குன்றுபோல் உயர்ந்து நிற்பதால் இதற்கு Tadasana – தாடாசனம் என்று பெயர்.

இதனை “தாளாசனம்” என்று மற்றொரு பெயராலும் அழைக்கின்றனர். “தாள்” என்றால் பாதம். உடலின் முழு எடைகளையும் இரு பாதங்களிலும் தாங்கிக்கொண்டு உடலை நேராக அமைத்துக்கொள்ளும் ஆசனம் என்பதால் இந்த ஆசனம் “தாளாசனம்” (Talasana) என்றும் பெயர் பெற்றுள்ளது.

இந்த தடாசனத்திற்கு “சமஸ்திதி ஆசனம்” (Samasthiti Pose) என்று ஒரு பெயரும் உள்ளது. சமஸ்திதி என்றால் “சம நிலைப்பாடு” என்று பொருள். இது மன அமைதி, விழிப்புணர்வு, சமநிலை ஆகியவைகளை பேணிக்காப்பதால் “சமஸ்திதி ஆசனம்” என்று அழைக்கப்படுகிறது.

Tadasana - Mountain pose

இதற்கு “ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana) என்று ஒரு பெயரும் உண்டு.

சமஸ்கிருதத்தில் “ஊர்த்துவம்” என்றால் மேல், மேல்புறம், மேல்நோக்கி என்று பொருள்.

ஒரு பொருள் மேல்திசை நோக்கி இருக்குமானால் அதை குறிப்பிட ஊர்த்துவம் என்னும் பதத்தை உபயோகப்படுத்துவதுண்டு.

ஹஸ்தா” என்றால் கைகளைக் குறிக்கும். பயிற்சி செய்பவரின் கைகள் மேல்நோக்கி இருப்பதால் இதனை “ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana) எனவும் அழைக்கின்றனர்.

அதாவது, ஊர்த்துவ ஹஸ்தாசனா என்றால் “கைகளை மேல்நோக்கி உயர்த்திய ஆசனம்” என்று பொருள்.

சரி,… இந்த பதிவில் நாம் மலைபோன்று உடலுக்கு உறுதியை தருகின்ற பல பெயர்களில் அறியப்படுகின்ற தடாசனத்தைப்பற்றி பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

பெயர் – Tadasana – Talasana

தமிழில் – தடாசனம் மற்றும் தாளாசனம்.

சமஸ்கிருதம் – Tadasana – Talasana

ஆங்கிலம் –

  • Upward Hands Pose
  • Upward Salute
  • Volcano Pose
  • Mountain pose.

வேறுபெயர்கள்

  • Samasthiti
  • Eqal Standing Pose
  • Talasana
  • Urdhva Hastotanasana
  • Upward Hand Stretch Pose
  • Raised Hand Pose
  • Tadasana Urdhva Baddhanguliyasana

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – balance, Strength.

இது எளிதான அதே வேளையில் மிகச் சிறப்பான ஆசனம் எனலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். கணுக்கால், கெண்டைக்கால், இடுப்பு, கைகள், தோள்பட்டை முதலியவைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி.

சரி, இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.

Tadasana - Mountain pose step

தடாசனம் நின்றுகொண்டு பயிற்சி செய்யவேண்டிய ஆசனம் ஆகும்.

“ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana), தாளாசனம் (Talasana) என்று பலபெயர்களில் அழைக்கப்படும் இந்த Tadasana – தாடாசனம் என்னும் பயிற்சியில் மொத்தம் மூன்று வகைகள் (There are a total of three types of this exercise called “Tadasana”) உள்ளன. அவைகளை ஒன்றையடுத்து ஒன்றாக வரிசையாக பயிற்சி செய்தல் அவசியம்.

நன்கு கெட்டியான விரிப்பின்மீது இரு கால்களையும் பக்கவாட்டில் 22 சென்டிமீட்டர் அகலத்தில் இருக்கும்படி வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். அதன் பின் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே வலது கையை மட்டும் தலைக்கு மேலே தூக்கி காதுகளை ஒட்டியபடி வைக்கவும்.

Talasana - Urdhva Hastasana girl

உள்ளங்கையை உள்பக்கம் பார்த்து இருக்கும்படி பார்த்துகொள்ளவும். கையை மேலே தூக்கும்போது இரண்டு குதிகால்களையும் மேலே உயர்த்தி கால்விரல்களை பயன்படுத்தி நிற்கவும்.

இதேநிலையில் 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் கைகளை பின்னால்சுற்றி உடம்பின் பக்கவாட்டில் கொண்டுவரும் அதேவேளையில் மூச்சுக்காற்றையும் மெதுவாக வெளியேவிட்டு குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

இது போன்று இடதுகைகளுக்கும் பயிற்சிகொடுக்கவும்.

இது முதல்வகை பயிற்சி.

முதல்வகை பயிற்சி முடிந்ததும் இரண்டாம்வகை பயிற்சி செய்தல் வேண்டும்.

இதுவும் முதல்வகையைப்போல்தான் பயிற்சி செய்யவேண்டும் என்றாலும் ஒரு கையை மட்டும் உயர்த்தி பயிற்சி செய்வதற்கு பதிலாக இரண்டு கைகளையும் ஒருசேர மேலே தூக்கி உள்ளங்கைகளை இணைத்து கும்பிட்ட நிலையில் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.

Talasana

மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி காதுகளை ஒட்டியபடி கும்பிட்ட நிலையில் வைக்கவும்.

கைகளை மேலே தூக்கும்போது இரண்டு குதிகால்களையும் மேலே உயர்த்தி கால்விரல்களை பயன்படுத்தி நிற்கவும்.

5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடியே கைகளை மெதுவாக கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

இதற்கு அடுத்து மூன்றாவது வகையை பயிற்சி செய்யவும்.

இதுவும் இரண்டாவது வகையைப்போலவேதான் பயிற்சிசெய்ய வேண்டும் என்றாலும் மேலே தூக்கிய இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக நன்கு பின்னி பிணைத்து உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டியது அவசியம்.

Urdhva Hastasana.

5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடி கைகளை கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.

இது செய்வதற்கு எளிமையான ஆசனம் என்பதால் ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றது.

நீங்கள் மிகவும் சோர்வடைந்திருப்பதாக உணர்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ஆசனத்தை செய்யுங்கள் சோர்வு நீங்கி சுறுசுறுப்படையலாம்.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடலின் அத்தனை தசைகள் மற்றும் நரம்புகள் இயக்கப்பட்டு உடல் வளர்ச்சி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் கை, கால், முதுகெலும்புகள் நன்கு பலமடைகின்றன. இது தொடை எலும்புகளையும் பலப்படுத்துகின்றன.

கழுத்துவலி, கால்வலி நீங்குவதோடு நுரையீரலும் பலம் பெறும். கணுக்கால், கெண்டைக்கால், தொடைகள், இடுப்பு, கைகள், தோள்பட்டை வலிமை பெறும்.

இன்று பலருக்கும் “வெரிகோஸ்” (Varicose Veins) என்று ஒரு பிரச்சனை கால்களில் ஏற்படுகிறதல்லவா?…

அதாவது கால் நரம்புகளில் முடிச்சு ஏற்பட்டு நரம்புகளெல்லாம் வீங்கி கால்களை அவலட்சணமாக்குவது மட்டுமல்லாது கால்களில் சொல்லொண்ணா வலிகளையும் ஏற்படுத்துகிறதல்லவா?…

ஆண் பெண் வித்தியாசமின்றி இன்று பலரும் இந்நோயிலிருந்து விடுபடுவது எப்படி என்று தவியாய் தவிக்கிறார்களல்லவா?…

இனி கவலை வேண்டாம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்!.

இந்த “தாளாசனம்” (Talasana) பயிற்சி சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் “வெரிகோஸ்” (Varicose Veins) நோய்க்கு சிறந்த தீர்வாக அமையும்.

தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வாருங்கள்… “வெரிகோஸ்” (Varicose Veins) பிரச்னை போயே போச்சு. இனி ஊருக்குள் உங்களைப்பற்றிதான் ஒரே பேச்சு. இனி நீங்களும் விடலாம் நிம்மதி பெரு மூச்சு.

மேலும், பல நோய்களுக்கு இந்த பயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பாதம், கணுக்கால், கால் விரல்கள், கெண்டைக்கால் சதைகள் ஆகியன வலுப்பெறுவதால் பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி ஆகியன குணமாகின்றன.

ஆனால், மேற்கண்ட பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது. மேற்கண்ட நோய்கள் வருவதற்கு முன்னால் இந்த பயிற்சியினை செய்துவந்தால் மேற்கண்ட நோய்கள் வராமல் வருமுன் காக்கலாம்.

மேலும், இந்த பயிற்சியால் நரம்பு மண்டலம் முழுவதும் பலம் பெறுகின்றன. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீரடைந்து புத்துணர்வு கிடைக்கின்றன.

இது கால் நரம்பு மற்றும் கால் தசைகளை மட்டுமல்லாது வயிற்று தசைகளையும் நன்கு வலுவடைய செய்வதோடு செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.

கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவைகளை மென்மையாக மசாஜ் செய்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

நுரையீரல்களின் திறனை அதிகரிக்கின்றன.

முதுகெலும்பை நேராக்குகிறது. முதுகு வலியை நீக்குகிறது. நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.

மன அழுத்தம், பதட்டம், சோர்வு முதலியவைகளை குறைக்கிறது.

உடலின் அத்தனை தசைகளுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமைவதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. மனதிற்கு அமைதியை தருகிறது.

தலைவலி உள்ளவர்கள் இந்த தடாசன பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களும் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பமாக இருப்பவர்கள் கால்களை சேர்த்து வைத்து பயிற்சி செய்வதற்கு பதிலாக சிறிது அகட்டிவைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். இது உடல் தடுமாற்றம் அடைவதை தவிர்க்கும்.

இந்த ஆசனம் செய்யும்போது மயக்கம் ஏற்பட்டால் மெதுவாக கைகளை கீழே இறக்கி ஓய்வு எடுக்கவும்.

பாதவலி, கால்வலி, குதிகால் வலி, கால் வீக்கம், மூட்டுவலி, கால்விரல்களை வலி முதலியன இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது.

தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி (Migraine Headaches) உள்ளவர்களும் இந்த ஆசனம் செய்வதை தவிக்கவும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை செய்வதை தவிர்க்கலாம்.

முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்துகளில் வலி, காயங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்கள்வரை இந்த ஆசனத்தை செய்துவரலாம். ஆசனம் செய்யும்போது கால்களை சேர்த்து வைப்பதற்கு பதிலாக கொஞ்சம் அகட்டி வைத்துக்கொண்டு பயிற்சி செய்வது உடல் தள்ளாடாமல் சமநிலையில் நிற்க உதவி செய்யும். மூன்றாவது மாதத்திற்கு பிறகு இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!