"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Sukhasana – சுகாசனம்

Sukhasana – சுகாசனம். நீங்கள் அழகாக இருக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால், நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டியது அவசியம்.

ஆரோக்கியம் வேண்டுமெனில் மனம் கவலைகளுக்கு உட்படாமல் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.

மனம் கவலைகளுக்கு உட்படாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமெனில் மனம் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு கொந்தளிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மனம் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல் அமைதியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு முறையாக பயிற்சிகொடுக்க வேண்டும்.

அதற்கான பயிற்சியே “தியானம்“.

Sukhasana - Easy Pose

இந்த தியானப்பயிற்சியை பயில்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.

அந்த விதிமுறைகளில் ஒன்று நீங்கள் தியானப்பயிற்சிசெய்ய அமரும்போது உங்கள் உடல் எந்தவித சிரமமும் இல்லாமல் இயல்பாக இருக்கவேண்டும். அதேவேளையில் உறுதியாகவும் இருக்கவேண்டும்.

அப்படியென்றால்தான் உங்களால் பல மணிநேரம் சிரமமில்லாமல் தியானத்தில் உட்காரமுடியும்.

அதேவேளையில், உங்கள் உடல் வளையாமலும் கூன்விழாமலும் முதுகு செங்குத்தாக நேராக இருக்க வேண்டியது அவசியம். கூன்விழுந்த முதுகோடு தியானமோ அல்லது மூச்சுப்பயிற்சியோ செய்தீர்கள் என்றால் அது உடலில் பலவித பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவேதான், “பிராணயாமம்” என்னும் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளையும் உட்காருவதற்கான சில ஆசன முறைகளையும் சித்தர்களும் யோகிகளும் வகுத்துதந்துள்ளார்கள்.

ஆசனம் என்பது உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் ஆடாமல் அசையாமல் நெடுநேரம் வைத்திருப்பதைக் குறிக்கும். உடல் அசையாமல் இருந்தால்தான் மனமும் அசையாமல் நிலைபெறும். மனம் அசையாமல் நிலைபெற்றால்தான் தியானமும் கைகூடும்.

உடலை வளப்படுத்த பல ஆசனங்கள் உள்ளன என்றாலும், தியானப் பயிற்சிகளுக்காக சில தனிப்பட்ட ஆசனங்கள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அவைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்…

பத்மாசனம்.

வஜ்ராசனம்.

சித்தாசனம்.

ஸ்வஸ்திகாசனம்.

கோமுகாசனம் ஆகியவைகளைக் குறிப்பிடலாம்.

இதில் பத்மாசனம், சித்தாசனம் முதலியனவற்றை எடுத்த எடுப்பில் செய்வது என்பது அனைவராலும் முடியாத காரியம். சில மாதங்கள் முறையாக பயிற்சியெடுத்து உடலை பழக்கப்படுத்தினால் மட்டுமே இதில் நெடிய நேரம் உட்காருவது சாத்தியம்.

இப்படியானவர்கள் பழகுவதற்கு எளிதாக உள்ள கோமுகாசனம், ஸ்வஸ்திகாசனம் இவைகளில் ஏதாவதொன்றில் உட்கார்ந்து மூச்சுப்பயிற்சி மற்றும் தியானம் பயிலலாம். இதுவும் கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் என்ன செய்வது?!!..

கவலையை விடுங்கள்… உங்களுக்காக இருக்கவே இருக்கிறது “சுகாஸனம்”.

Continue the practice for - Sukhasana - Easy Pose.

ஆம்,… உடல் பருமனாக இருப்பவர்களால் எந்த ஆசனத்திலும் உட்கார முடியாது. அதற்காக அவர்களை கைவிட்டுவிட முடியுமா?… அவர்களும் சாதிக்க துடிப்பவர்கள்தானே… அவர்களுக்கும் தியானம் முதலியன செய்து அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்தி வாழ்க்கையை வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற ஆசை இருக்கும்தானே….

அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த சுகாசனம். அதாவது சம்மணம் போட்டுகொண்டு ஜம்மென்று உட்காருவதுதான் இந்த ஆசனத்தின் ஹைலைட் பயன்பாடு.

“அட்ரா சக்க… “அட்ரா சக்க”….

அட இது அழகா சவுகரியமாக இருக்குதேன்னு வாழ்நாள் பூராவும் சம்மணம் போட்டுக்கிட்டே உட்கார்ந்துடாம கொஞ்சம் கொஞ்சமா முன்னோக்கி நகரணும் புரிஞ்சுதா….

சில மாதங்கள் இந்த சுகாசனத்துல உட்கார்ந்து பயிற்சி எடுத்தபின் அடுத்த கட்டமாக கோமுகாசனம், ஸ்வஸ்திகாசனம் முதலிய ஆசனங்களில் உட்கார கொஞ்சம் கொஞ்சமாக உடலை பழக்கப்படுத்த வேண்டும்.

மேற்குறித்த ஆசனங்களில் உட்காருவதற்கு தேகத்தை பழக்கப்படுத்திய பின்பு அதற்கு அடுத்த கட்டத்திற்கு நகரலாம். அதாவது சித்தாசனம், பத்மாசனம் முதலிய ஆசனங்களை பயிற்சி செய்யலாம்.

இந்த சுகாசனப் பயிற்சியே போதும். இதுதான் சுகமாக இருக்கிறது என்று இதிலேயே உட்கார்ந்து விடாமல் கோமுகாசனம், ஸ்வஸ்திகாசனம், சித்தாசனம், பத்மாசனம் என்று படிப்படியாக முன்னோக்கி நகரவேண்டும் என்று ஏன் சொல்கிறேன் என்றால் இந்த சுகாசனத்தில் ஒரு பிரச்சனை உள்ளது.

அது என்னவென்றால், இது உட்காருவதற்கு சுகமாக இருக்கிறது என்பதால், இந்த சுகாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்தீர்கள் என்றால் சில நிமிடங்களிலேயே உங்களை அறியாமலேயே தூக்கம் உங்கள் கண்களை தலாட்ட ஆரம்பித்துவிடும். உடலும் முன்னோக்கி சாய ஆரம்பித்துவிடும். எனவேதான் இந்த சுகாசனம் தியானப் பயிற்சிக்கு ஏற்றதல்ல என்று சொல்லப்படுகிறது

எனவே, ஆரம்பகட்டத்தில் இதனை சிலமாதங்கள் பயிற்சி செய்தபின் ஸ்வஸ்திகாசனம், சித்தாசனம், பத்மாசனம் ஆகிய ஆசனங்களில் ஏதாவதொரு ஆசனத்தை பயிற்சி செய்து தியானத்திற்கு உட்காரப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சரி,.. நாம் இப்போது உட்காருவதற்கு மிக எளிதான “சுகாசனம்” செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம் வாருங்கள்….

பெயர் – Sukhasana.

தமிழில் – சுகாசனம்.

சமஸ்கிருதம் – Sukhasana.

ஆங்கிலம் – Easy Pose.

வேறுபெயர்கள் – Easy Sitting Pose.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Restorative, Meditative.

“சுகாசனம்” (Sukhasana) என்பது மிகவும் எளிதானது. நாம் சாதாரணமாக சம்மணம் போட்டு உட்காருகிறோமல்லவா அதுவே சுகாசனம்.

Continue the practice for - Easy Pose

எந்த ஆசனத்தில் உட்கார்ந்தாலும் முதுகு கூன்விழாமல் நேராக இருக்க வேண்டியது அவசியம். எனவே முதன்முதலாக மூச்சு பயிற்சி மற்றும் தியானம் செய்பவர்கள் முதலில் எளிமையான சுகாசனத்தில் அமர்ந்து பயிற்சி மேற்கொண்டு அதன்பின் ஸ்வஸ்திகாஸனம், சித்தாசனம், பத்மாசனம் என கடினமான பயிற்சிகளை படிப்படியாக மேற்கொள்ளலாம்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….

ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து கீழே விரித்துக் கொள்ளுங்கள். விரிப்பின்மீது இருகால்களையும் நீட்டி உட்காருங்கள். அதன்பின் வலது முழங்காலை மடித்து பாதத்தை இடது தொடையின் கீழ் வைக்கவும். அதன்பின் இடது முழங்காலை மடித்து பாதத்தை வலது தொடையின் கீழ் வைக்கவும். இது சாதாரணமாக நாம் சம்மணம்கூட்டி அமர்வதுபோலத்தான். ஆனால் முதுகு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவேண்டியது மிகமிக முக்கியம்.

அப்படி நிமிர்ந்து உட்காரும்போது உடலை தம்கட்டி விறைப்பாக வைக்காமல் இயல்பாக வைத்துக்கொள்ள வேண்டியதுவும் அவசியம்.

shoesasana Prabhu Deva
shoesasana vadivelu

வலது உள்ளங்கையை சின்முத்திரையுடன் வலது கால் முட்டியின் மீதும் இடது உள்ளங்கையை சின்முத்திரையுடன் இடதுகால் முட்டியின்மீதும் வைக்கவும்.

முதுகு, கழுத்து, தலை முதலியனவற்றை வளைக்காமல் அதேவேளையில் விறைப்பாகவும் வைக்காமல் செங்குத்தாக ஒரே நேர்கோட்டில் வைத்திருக்க வேண்டியது மிக மிக முக்கியம்.

இதுவே சுகாசனம்.

இந்த ஆசனத்தை செய்வது எளிதானது.

பிற ஆசனங்களைப்போல உடலை வருத்தாமல் சுகமாக வைத்திருப்பதால்தான் இதற்கு “சுகாசனம்” என பெயர்.

ஆரம்பகட்ட மூச்சு பயிற்சி மற்றும் தியானப்பயிற்சிக்கு இந்த ஆசனத்தை பயன்படுத்தி வரலாம். 5 நிமிடத்தில் தொடங்கி 1 மணிநேரம் வரை இதில் அமரலாம். அதன்பின் அதிக பலன்தரும் சித்தாசனம், பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம் முதலியவைகளை பயிற்சிசெய்து தியானத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயிற்சியின் பலன்கள்

இந்த பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது.

வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

இடுப்பு, முதுகு வலுப்பெறுகிறது.

மனது அமைதி பெறுகிறது.

ஆரம்பகட்ட மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சிகளுக்கு மிகவும் ஏற்றது.

முக்கிய குறிப்புகள்

முழங்கால், இடுப்பு பகுதிகளில் காயம்பட்டவர்கள் இந்த ஆசனத்தை கவனமுடன் பழகுதல் வேண்டும்.

முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தில் அதிக நேரம் இருத்தல் கூடாது.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக வயிறு சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

இடுப்பு, முதுகு வலுப்பெறுகிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முழங்கால், இடுப்பு பகுதிகளில் காயம்பட்டவர்கள் இந்த ஆசனத்தை கவனமுடன் பழகுதல் வேண்டும்.

முதுகு மற்றும் இடுப்பு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தில் அதிக நேரம் இருத்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “வயிறு சார்ந்த பிரச்சனைகள்” குறித்த அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!