"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Padmasana – Kamalasana.

69 / 100

”பத்மம்” என்றால் தாமரையை குறிக்கும். ”கமலம்” என்றாலும் தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் ”பத்மாசனம்” (Padmasana) என்றும், ”கமலாசனம்” (Kamalasana) என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாசனம் அல்லது கமலாசனம் என்றால் ”தாமரை ஆசனம்” என்று பொருள்.

padmasana

மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்…. மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரு கால்களும் பார்ப்பதற்கு தாமரை பூவின் இதழை போன்ற வடிவத்தில் இருக்கிறதல்லவா!… அதனால்தான் இந்த ஆசனத்திற்கு ”பத்மாசனம்” மற்றும் ”கமலாசனம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தியானம் செய்வதற்கு பெரும்பாலானவர்கள் இந்த ஆசனத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அளவிற்கு மனதை ஒருமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அற்புதமான ஆசனம்.

ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி இடது தொடைமீது வைக்கவும்.

அதே போல் இடதுகாலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும்.

இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் முழங்கால்மீது சின்முத்திரை பிடித்தபடி வைக்கவும். மூச்சை நன்கு இழுத்து அதே வேளையில் மெதுவாக நேர்த்தியாக ஒரேசீராக சுவாசிக்கவும்.

padmasana step by step

இது சொல்வதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டம். முழங்கால்களும், பாதங்களும் ஆரம்பத்தில் விண்ணென்று வலிக்கும். தொடர்ந்து பயிற்சியெடுக்க வலி மறையும்.

இந்த ஆசனத்தில் 5 நிமிடங்கள் இருக்கவும். ஆரம்பக்கட்டத்தில் 5 நிமிடம் இருப்பது கடினமாக இருக்கலாம். ஓரிரு நிமிடங்கள் ஆரம்பத்தில் இருக்கப் பழகி படிப்படியாக 5 நிமிடங்கள் இருக்க பயிற்சி எடுக்கவும்.

5 நிமிடம் பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக் கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும்.  அதாவது வலது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது இடது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். அதன்பின் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும்.

இதே நிலையில் 5 நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக இருக்கவேண்டியது மிக முக்கியம் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றுவர முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். முழங்காலில் மூட்டுவலிகள் நீங்கும். குதிகால் நரம்புகள் பலம் பெறும். கால் வலி மற்றும் முதுகு வலிகள் குணமாகும். ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். வயிற்றுவலி நீங்கும். தொந்தி கரையும்.

தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம். தியானம் செய்வதற்கு இந்த ஆசனம் கடினமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனம், வஜ்ராசனம் போன்ற எளிதாக அமரக்கூடிய ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வரலாம்.

ஸ்வஸ்திகாசனம் பற்றி அறிந்து கொள்ள கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க 

>> ஸ்வஸ்திகாசனம் – Swastikasana <<

வஜ்ராசனம் பற்றி அறிந்துகொள்ள கீழேயுள்ள சுட்டியை தட்டுங்க.

>> வஜ்ராசனம் – vajrasana <<

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!